WPL || முதலாவது கோப்பையை கைப்பற்ற போவது யார்?!!.. மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்..!!

WPL || முதலாவது கோப்பையை கைப்பற்ற போவது யார்?!!.. மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்..!!



Mumbai Indians vs Delhi Capitals in the final of the first Women's Premier League T20 cricket series today

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த வருடம் மகளிருக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கான முதலாவது பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2  போட்டிகளில் மோதின. லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றன.

நிகர ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. புள்ளிகளின் அடிப்படையில் முறையே மும்பை இந்தியன்ஸ்  2 வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3 வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4-வது மற்றும் 5 வது இடங்களை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறின. வெளியேற்றுதல் சுற்று போட்டியில் உ.பி.வாரியர்ஸ் அணியை நேற்று முன்தினம் எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், முதலாவது மகளிர் பிரிமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று  இரவு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.