திரில் வெற்றியுடன் ப்ளே-ஆப் சுற்றில் நுழைந்த லக்னோ..!! 2 ரன்களில் கோட்டைவிட்ட கொல்கத்தா..!!

திரில் வெற்றியுடன் ப்ளே-ஆப் சுற்றில் நுழைந்த லக்னோ..!! 2 ரன்களில் கோட்டைவிட்ட கொல்கத்தா..!!



Lucknow qualified for the play-off round after tasting a thrilling victory against Kolkata by 1 run.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த லக்னோ அணி ப்ளே-ஆப்  சுற்றுக்கு தகுதி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 68 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

முன்னதாக குஜராத் மற்றும் சென்னை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் லக்னோ அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டீ காக்-கரண் சர்மா ஜோடி தொடக்கம் அளித்தது. கரண் சர்மா 3 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய மன்கட்  ஓரளவிற்கு நல்ல பங்களிப்பை அளித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 0, குருணால் பாண்டியா 9, டீ காக் 28 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி சரிவை சந்தித்தது.

இதன் பின்னர் கைகோர்த்த நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதானி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் அதிரடியாக ரன்களை குவித்தது. பதானி 25 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் விளாசிய பூரன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 177 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, ஜேஸன் ராய்-வெங்கடேஷ் அய்யர் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. வெங்கடேஷ் அய்யர் 24, நிதிஷ் ராணா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேஸன் ராய் 45 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய குர்பாஸ் 10, ஆண்ட்ரூ ரசல் 7 , ஷர்துல் தாக்கூர் 3, சுனில் நரைன் 1 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிந்தனர். வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில்  41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துகளை பறக்கவிட்ட ரின்கு சிங் அரைசதம் விளாசியதுடன் 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.இருந்த போதிலும் வெற்றிக்கு தேவையான 2 ரன்களை அடிக்க முடியாததால் 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 3 வது அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.