ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா..!! போராடி தோற்ற இலங்கை..!!

ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா..!! போராடி தோற்ற இலங்கை..!!



indian-team-won-by-41-runs-in-the-match-against-sri-lan

சூப்பர்-4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன் படி ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. சிறப்பான தொடக்கம் அளித்த தொடக்க ஜோடி 80 ரன்கள் சேர்த்த பின்பு பிரிந்தது. முதலில் சுப்மன் கில் 19 (25), விராட் கோலி 3 (12), ரோஹித் சர்மா 53 (48) ஆகியோர் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் புதுமுக சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இணைந்த கே.எல்.ராகுல்-இஷான் கிஷன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. மீண்டும் வெல்லாலகே பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் சிக்கினார். பின்னர் சீரான இடைவெளியில் இஷான் கிஷன் 33, ஹர்டிக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4, பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தது. இறுதி கட்டத்தில் அதிரடிகாட்டிய அக்ஸர் பட்டேல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 214 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு நிசங்கா-கருணரத்னே ஜோடி தொடக்கம் அளித்தது.

தொடக்கத்திலேயே இலங்கை அணிக்கு இரட்டை செக் வைத்த ஜஸ்பிரிட் பும்ரா நிசங்கா 6, குஷல் மெண்டிஸ் 15 ஆகியோரை வெளியேற்றினார். மற்றொரு தொடக்கவீரர் கருணரத்னே 2 ரன்களுடனும், இதன் பின்னர் வந்த சமரவிக்ரமா (12 ), சாரித் அசலங்கா (22), கேப்டன் ஷனகா (9) சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை ஆல்-ரவுண்டர் தனஞ்செயா டிசில்வா-வெல்லாலகே ஜோடி போராடி மீட்டது. அணியின் ஸ்கோர் 162 ஐ எட்டிய போது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் டிசில்வா ஆட்டமிழந்ததால் போட்டி மீண்டும் இந்திய அணியின் பக்கம் திரும்பியது.

இதனை தொடர்ந்து பிடியை இறுக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புது முக வீரர் வெல்லாலகே  42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சூப்பர்-4 சுற்றில் 2 வது வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்தியாவின் பிரம்மாண்ட வெற்றியால் வங்கதேசத்தின் இறுதி சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.