2 வது டி-20 போட்டி: ஆஸ்திரேலியாவை நொறுக்கிய ரோஹித்!.. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

2 வது டி-20 போட்டி: ஆஸ்திரேலியாவை நொறுக்கிய ரோஹித்!.. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!



india won 2 nd t 20 match by six wickets against australia

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20  தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது போட்டியில்  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் நேரமின்மை காரணமாக  8 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டு டாஸ் போடப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் தொடக்கம் அளித்தனர். கேமரூன் கிரீன் 5 ரன்களுடன் ரன் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.  5-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி 46 ரன்கள் சேர்ந்திருந்த போது அதிரடியாக விளையாடி வந்த பின்ச் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் வெளுத்துவாங்கிய மேத்தியூ வேட் இந்த போட்டியிலும் பின் வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 8-வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. மேத்தியூ வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து 91 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கேப்டன் ரோஹித் சர்மா-கே.எல். ராகுல் தொடக்கம் அளித்தனர். ஒருமுனையில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர்களை விளாசிக் கொண்டிருந்தார்.  2.5 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஜாம்பா பந்துவீச்சில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் சிக்சர் விளாசிய கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரி விரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.