எதிர்பாராத திருப்பம்..! கடைசி பந்தில் நடந்த மாயாஜாலம்..!! ஹைதராபாத் அணி திரில் வெற்றி..!!

எதிர்பாராத திருப்பம்..! கடைசி பந்தில் நடந்த மாயாஜாலம்..!! ஹைதராபாத் அணி திரில் வெற்றி..!!



Hyderabad tasted a thrilling 4-wicket win in the 52nd league match against Rajasthan.

ராஜஸ்தானுக்கு எதிரான 52 வது லீக் போட்டியில் ஹைதராபாத் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு யாஷ்வி ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த பட்லர் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி மைதானத்தின் இரு முனைகளில் இருந்தும் தாக்குதலை தொடுத்தது. பந்துகள் அவப்போது பவுண்டரிக்கு பறந்தது. முதல் 20 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்திருந்த ஜோஸ் பட்லர் அடுத்த 39 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அவர் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் அரைசதம் விளாசிய சாம்சன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 215 ரன்கள் இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு அமொல்பிரீத் சிங்- அபிஷேக் இன்னிங்ஸை தொடங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களில் அமொல்பிரீத் சிங் 33, அபிஷேக் 55 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடி காட்ட, மறுமுனையில் ஹென்ரி கிளாசன் 12 பந்தில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 47, கேப்டன் ஆடம் மார்க்ரம் 6 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 7 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 25 ரன்கள் குவித்து முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் வந்ததால் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது.  கடைசி பந்த எதிர் கொண்ட அப்துல் சமத் பந்தை தூக்கியடித்து கேட்ச் கொடுத்தார். அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீசப்பட்ட பந்தை அப்துல் சமத் சிக்சருக்கு விளாசினார்.

இதன் மூலம், 20 ஓவர்களின் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றிபெற்றது.