WPL || டெல்லி அணியின் தில்லாலங்கடி!!: பெங்களூரை சாய்க்க விதியின் ஓட்டையை பயன்படுத்திய ரகசியம்..!



Delhi team fielded 5 foreign players has now been revealed

நேற்றைய போட்டியில் டெல்லி அணி 5 வெளிநாட்டு வீராங்கனைகளுடன் களமிறங்கியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நாளில் நடைபெற்ற முதலாவது போட்டியில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரின் 2 வது நாளான நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 224 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 163 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் டெல்லி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி அணி தரப்பில் தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் டெல்லி அணி தரப்பில் 5 வெளிநாட்டு வீராங்கைகள் பங்கேற்றனர். மெக் லானிங் (ஆஸ்திரேலியா), மரிசானே கப் (தென்னாப்பிரிக்கா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து), ஜெஸ் ஜோனாசென் (ஆஸ்திரேலியா), தாரா நோரிஸ் (அமெரிக்கா) ஆகிய 5 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டி விதிமுறைப்படி ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகளை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் களம் இறங்க காரணம் தெரியவந்துள்ளது.

ஐ.சி.சி உறுப்பு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கும் அணிகள், 4 வெளிநாட்டு வீராங்கனைகளுடன் சேர்த்து உறுப்பு நாட்டை சேர்ந்த 1 வீராங்கனையையும் ஆடும் லெவனில் இணைத்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உறுப்பு நாடுகள் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பட்டியலில் இல்லாமல் கிரிக்கெட் ஆடிவரும் பிற நாடுகளை குறிக்கும். இந்த விதியை பின்பற்றி நேற்று டெல்லி அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் களம் இறங்கியதாக கூறப்படுகிறது.