ப்ளீஸ்... கஷ்டப்பட்டு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை அரசியலுக்கு எடுத்துட்டு போகாதிங்க.!! குமுறும் காளை உரிமையாளர்கள்.!!

ப்ளீஸ்... கஷ்டப்பட்டு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை அரசியலுக்கு எடுத்துட்டு போகாதிங்க.!! குமுறும் காளை உரிமையாளர்கள்.!!



bull-owners-request

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை.  தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இந்தவருடம் பொங்கல் பண்டியையொட்டி மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு விழாவில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை விழா கமிட்டியினர் மேற்கொண்டாலும் போட்டிகளின் போது காளை உரிமையாளர்களுக்கு மனவருத்தம் ஏற்படுவதாக குமுறுகின்றனர் காளை உரிமையாளர்கள்.

தங்கள் ஊரில் அதிகப்படியான மாடுகளை அவிழ்க்கவேண்டும் என்ற நோக்கில் விழா கமிட்டியினர் அதிகப்படியான காளைகளுக்கு டோக்கன்களை பதிவு செய்கின்றனர். இதனை நம்பி வெளிமாவட்டத்தில் இருந்து வண்டி வாடகை குடுத்து, பட்டினியுடன் கால்கடுக்க வரிசையில் நின்று இறுதியில் அந்த மாடு அவுக்கமுடியாமல் போனால் காளை உரிமையாளர்களுக்கு வரும் மன உளைச்சலை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..

ஜல்லிக்கட்டு போட்டியில், அணி மாற்றம், மாடு திரும்பி வாடிக்கு வருதல், வீரர்கள் காயப்படுதல்,விருந்தினர் அழைப்பு, சிறுசிறு சலசலப்பு என பலவற்றிற்கு நேரங்கள் வீணாகும். எனவே தங்கள் ஊரில் எவ்வளவு காளைகளை அவிழ்க்கமுடியும் என்பதை யோசித்து டோக்கன் பதிவு செய்தால். மாட்டின் உரிமையாளர்கள் தங்களது காளையை அவிழ்க்கமுடியவில்லையே என்று வருத்தப்படும் சூழ்நிலை வராது என கூறுகின்றனர். மாட்டின் உரிமையாளர்கள்.

பல ஊர்களில் இருந்து மாடு கொண்டு வருபவர்கள் அனைவரும் பரிசுக்கு ஆசைப்பட்டு வருவதில்லை. தன்னோட பெருமைக்கும், மாட்டோட பெருமைக்கும்தான் வருகிறார்கள். ஆனால் தற்போது, பரிசு கொடுப்பவர்களின் பெயர்களையும், அவர்களது கட்சியின் பெயரையும், அவர்களது பொறுப்பின் பெயரையும் மற்றும் பரிசுகளின் பெயர்களையும் வர்ணனையாளர்கள் கூறி முடிப்பதற்குள் அடுத்தமாடு தயாராகி விடுகிறது. பல மாவட்டங்களை கடந்து மாடு கொண்டுவரும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தனது மாட்டின் பெயரை கூட விளம்பரப்படுத்தவில்லையே என குமுறுகின்றனர். 

அதேபோல், ஜல்லிக்கட்டு விழாவில் டோக்கன் வரிசையில் மாடுகளை விட்டால் காளைகளுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் சிரமமே இல்லாமல் போய்விடும். டோக்கன் படி காளைகளை அடைக்கும் போது டோக்கன் வரிசை எண் அதிகமாக இருப்பவர்கள் மாட்டையும் நிழலில் அமர்த்தி, அவர்களும் ஓய்வு எடுப்பார்கள் என கூறுகின்றனர் காளை உரிமையாளர்கள்.