பிள்ளைக்கு வரன் தேடும் பெற்றோரா நீங்கள்.? கட்டாயம் இதைப் படிங்க.!

பிள்ளைக்கு வரன் தேடும் பெற்றோரா நீங்கள்.? கட்டாயம் இதைப் படிங்க.!



Are you a parent looking for a life partner for your child? Must read this!

தனது பிள்ளைகளுக்கு திருமணத்தை நடத்தும் பொழுது தான், பெற்றோரின் கடமைகள் நிறைவு பெறுகிறது. அவர்கள் திருமண வயதை எட்டும் பொழுது, யாரையேனும் விரும்புகிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்கான வரனை, நீங்கள் தேட துவங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!!

இணையதளம், திருமண தகவல் மையம் போன்றவைகளை காட்டிலும் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மூலம் வரன் தேடுவது சிறப்பு. அவ்வாறு அமையாத பொழுது இதர வழிகளை நாடலாம். அப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் வரன் தேட வேண்டும். முதலில் உங்கள் பிள்ளையிடம் அவர்களின் எதிர்பார்ப்பை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

marriage

ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கும் பொழுது ஒன்று அல்லது இரண்டு ஜோதிடர்களை பார்க்கலாம். அளவுக்கு அதிகமான ஜோதிடர்களை பார்க்கும் பொழுது, ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை சொல்லி உங்களை குழப்ப நேரிடும். ஜாதகப் பொருத்தத்தை காட்டிலும் மனப்பொருத்தம் மிகவும் அவசியம் என்பதையும் மறவாதீர்கள். அந்த நபரின் கல்வி தகுதி, பழக்கவழக்கம், குணம், வேலை மற்றும் உடல் நிலை குறித்து நன்றாக விசாரித்த பின் முடிவெடுங்கள்.

அழகை பிரதானமாக வைத்து பெண்ணோ, மாப்பிள்ளையோ தேடாதீர்கள். நிரந்தரம் இல்லாத ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை கட்டமைப்பது சிறப்பாக இருக்காது. திருமணத்திற்காகும் செலவுகளை பகிர்ந்து கொள்வதை பற்றி முன்பே சம்பந்தி வீட்டாரிடம் பேசி விடுவது நல்லது.

marriage

மாப்பிள்ளை வீட்டார் கவனத்திற்கு: திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதும், செல்லாததும் அந்தப் பெண்ணின் விருப்பம். அவரது விருப்பத்தை கேட்டு, அது உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து வருமா என்று முடிவு செய்த பின், அந்த பெண்ணை மணமுடித்து வையுங்கள். நகை, பணம் என்று வரதட்சணை எதிர்பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். அது மட்டுமின்றி பணத்தை முன்வைத்து வரன் தேடும் பொழுது, ஒரு நல்ல குணவதி மருமகளாக உங்கள் வீட்டுக்கு வருவதை கூட நீங்கள் இழக்க நேரிடலாம்.

பெண் வீட்டார் கவனத்திற்கு: பெண் பார்க்க வீட்டிற்கு அழைக்கும் முன்பு பெண்ணின் புகைப்படம், பெண்ணைப் பற்றிய விபரங்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவியுங்கள். ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், ஜாதகப் பொருத்தமும் பார்த்தபின் பெண்பார்க்கும் படலத்தை அமைக்கலாம். சிலர் இரு வீட்டாரின் முதல் சந்திப்பை கோயில்கள் போன்ற பொது இடங்களிலும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாப்பிள்ளையின் வேலை, பழக்கவழக்கம், கோட்பாடுகள் போன்றவற்றை நன்கு விசாரித்து முடிவு செய்யுங்கள். நன்றாக ஊர்ஜிதப்படுத்த விரும்புவோர் புலனாய்வு அமைப்புகளிடமும் உதவியை நாடலாம்.

பெண், மாப்பிள்ளை இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறதா என்று இருபுறமும் விசாரித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில், அவர்களை வற்புறுத்தி, அந்த திருமண பந்தத்தை ஏற்படுத்த வேண்டாம். நாளடைவில் அவர்கள் வாழ்க்கையில் அது சிக்கலை கொண்டு வரும்.