எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: களைகட்டிய அ.தி.மு.க தலைமை அலுவலகம்..!

எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: களைகட்டிய அ.தி.மு.க தலைமை அலுவலகம்..!



Enthusiastic welcome for Edappadi Palaniswami: Weeded ADMK head office

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க  பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் 2600 க்கும் மேற்பட்ட பொதுக்குழுவினர் ஆதரவுடன் அவர் இந்த பொறுப்புக்கு தேர்வானதாக கூறப்பட்டிருந்தது.

பொதுக்குழு நடந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு  இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற  உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு பின்பும் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இதன் பின்னர் பொதுக்குழுவிற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்புக்கு எதிரான ஈ.பி.எஸ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை அலுவலகத்திற்கு அலுவலகத்திற்கு வருவதாக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தி்ல் பேனர் வைத்து, அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் திரண்டனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு கிளம்பிய எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது  இல்லத்திலிருந்தே வரவேற்பு தொடங்கியது. சுமார் 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரகாட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியத்துடன் கூடிய வரவேற்ப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.