முழு அடைப்பால் தொடரும் பதற்றம்..!!: மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

முழு அடைப்பால் தொடரும் பதற்றம்..!!: மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!



Due to the ongoing 48-hour complete blockade in the state of Manipur, the normal life of the people there has been affected.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவரும் 48 மணிநேர முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் வாழ்ந்துவரும் மெய்டீஸ் என்கிற பழங்குடியினர் அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்த்து வழங்குமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின பழங்குடியினர் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த மே மாதம் 2 ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தின் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. சவ்ரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த வன்முறை சிறிது, சிறிதாக அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து, பரவிவரும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. அங்கு படிப்படியக அமைதி திரும்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் சவ்ரசந்திரபூர் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து வன்முறை நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, சுராசந்த்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறையினரின் சீருடையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 5 க்கும் மேற்பட்ட அமைப்புகள் 48 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதன் காரணமாக மணிப்பூர் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. கடைகள், வணிக வளாகங்கள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படன.

இந்த முழு அடைப்பின் காரணமாக, பொது மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.