வருங்கால முதல்வரை சந்திக்க வாருங்கள்: தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும் பா.ஜ.க-வின் குரல்..!
வருங்கால முதல்வரை சந்திக்க வாருங்கள்: தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும் பா.ஜ.க-வின் குரல்..!
பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிறுத்தும் நடவடிக்கைகளில் தமிழக பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக மாணவர்கள் மத்தியில் முன்னிறுத்தும் நடவடிக்கையில், அக்கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வரும் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் ‘தாமரை மாநாடு’நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கவும், கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க-வை காலுான்ற வைக்கவும் அக்கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள பா.ஜனதாவின் மாநாட்டு செலவை ஈடுகட்ட, நிதி திரட்டும் பணியிலும் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, பா. ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடன், பள்ளி மாணவ, மாணவியரை கலந்துரையாட செய்யும் வகையிலான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளனர். அண்ணாமலையுடன் பேசுவதற்கு மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் ‘வருங்கால முதல்வரை சந்தியுங்கள்’ (MEET THE FUTURE CM) எNrU ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம் என்று அண்ணாமலை கூறி வரும் நிலையில், அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்யும் அக்கட்சியினரின் இத்தகைய செயல்பாடு பிற அரசியல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.