ஓ.பி.எஸ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தேர்தல் ஆணையரிடம் கேளுங்கள்: ஜெயக்குமார் அதிரடி..!

ஓ.பி.எஸ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தேர்தல் ஆணையரிடம் கேளுங்கள்: ஜெயக்குமார் அதிரடி..!



Ask the Election Commissioner which party the OPS belongs to

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும்  மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்கள்) ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்பதுரை மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் ஆகிய இருவரும் பங்கேற்றனர். ஓ.பி.எஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றார்.

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அ.தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியின் சார்பில் கலந்து கொண்டார், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இறந்து போனவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியதாக ஜெயக்குமார் கூறினார்.