என் மனைவி கூட இவ்ளோ காதல் கடிதங்களை எழுதவில்லை.! டெல்லி ஆளுநரை கிண்டல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவால்க்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மறைமுக மோதலும் நிகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் கூட மாநிலத்தின் புதிய கலால் கொள்கையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுங்கட்சி அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்குமாறு வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆளுநர் சக்சேனாவை தாக்கி கடிதம் எழுதினார். அதில், டெல்லியில் பாஜக ஆளும் நகராட்சி துறைகளில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அதை நீங்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால் ஊழலில் பாஜகவுக்கு அதனுடன் தொடர்புள்ளது என கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே பல விவாதங்கள் மோதல்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வி.கே.சக்சேனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா என்னை தினமும் திட்டுமளவுக்கு எனது மனைவி கூட என்னை திட்டியதில்லை. கடந்த ஆறு மாதங்களில் துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதிய அளவிற்கு, எனது மனைவி எனக்கு காதல் கடிதங்கள் எழுதவில்லை. ஆளுநர் அவர்களே, நீங்கள் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொண்டு கூலாக இருங்கள். அதனை போலவே உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்க கூறுங்கள் என கூறியுள்ளார்.