அகிலேஷ் யாதவுக்கு வெட்கமாகவே இல்லை.! கடுமையாக சாடிய அமித்ஷா.!

அகிலேஷ் யாதவுக்கு வெட்கமாகவே இல்லை.! கடுமையாக சாடிய அமித்ஷா.!



Amit Shah talk about Akhilesh Yadav

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி துவங்கி கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாடி கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அகிலேஷ் யாதவை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மட்டுமே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் ஒன்றாக இருப்பர். ஒருவேளை சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், அசம் கானின் தலையீடு அதிகமாக இருக்கும். அப்போது ஜெயந்த் சவுத்ரி வெளியே தூக்கி வீசப்படுவார். அவர்களது வேட்பாளர்களின் பட்டியலே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது.

பொய் கூறுவதற்கு அகிலேஷ் யாதவ் வெட்கப்படவில்லை. உண்மை என நம்புவார்கள் எனக்கருதி பொய்களை அகிலேஷ் யாதவ் உரத்த குரலில் பேசுகிறார். உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அகிலேஷ் சொல்கிறார். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை  மேம்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளன. அகிலேஷ் யாதவ் ஆட்சி காலத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற குற்ற செயல்களின் புள்ளி விவரத்தை அளிக்க முடியுமா? என நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும் என தெரிவித்தார்.