எப்போதும் ஒரே தரப்புதான்; அ.தி.மு.க-வில் இரண்டு தரப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: ஓ.பி.எஸ் அதிரடி..!

எப்போதும் ஒரே தரப்புதான்; அ.தி.மு.க-வில் இரண்டு தரப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: ஓ.பி.எஸ் அதிரடி..!


ADMK is always one side, there is no room for talk of two sides

கடந்த மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது, கடந்த ஜீன் 23 ஆன் தேதிக்கு முந்தைய நிலையே அ.தி.மு.கவில் தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார் அவருடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,  உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இது அ.தி.மு.க தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. தொண்டர்கள் எதை விரும்பினார்களோ அது இப்போது நடந்துள்ளது. அ.தி.மு.க-வை தொண்டர்களின் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அ.தி.மு.க-வை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார்.  தொண்டர்களின் இயக்கத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும் அது நடக்காது.

அனைவரும் ஒன்றுபட வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அ.தி.மு.க-வின் கொள்கைகளுக்கு இசைவு தெரிவிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அ.தி.மு.க எப்போதும் ஒரே தரப்பு தான்,  இருதரப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும். ஜெயலலிதாவின் தியாகங்களை மனதில் நிறுத்தி ஒன்றாக செயல்படுவோம் என்று கூறினார்.