'பப்ஜி' கேம் விளையாட தடையாக இருந்த குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்..!
'பப்ஜி' கேம் விளையாட தடையாக இருந்த குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்..!
ஒரு பெரிய தீவு பகுதியில் பல அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லும் ஒரு ஆக்ரோஷமான விளையாட்டு தான் 'பப்ஜி'. இந்த போட்டியில் எந்த அணியினர் கடைசிவரை உயிரிழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.
இந்த 'பப்ஜி' கேமானது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த விளையாட்டிற்கு பல கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும், ஏன் பெரும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் கூட அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுக்கு அடிமையான ஒரு இளைஞரால் டெல்லியில் ஒரு குடும்பமே நாசமாகிப் போய்விட்டது.
டெல்லியை சேர்ந்த சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா எனும் வாலிபர் பப்ஜி கேம் விளையாட கூடாது எனக்கூறிய பெற்றோரையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி விளக்கம் அளித்துள்ள போலீசார், "பெற்றோரை கொன்ற சுராஜ் அலியாஸ், பப்ஜி கேம் விளையாடி அதற்கு அடிமையானதால் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மெஹ்ரவுலி எனும் இடத்தில் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கு கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்ததால் 12ம் வகுப்பினை கைவிட்டு உள்ளான். ஊர் சுற்றி வந்த அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். பின்னர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சிவில் பொறியியலுக்கான டிப்ளமோ படிப்பில் அவனை மிதிலேஷ் சேர்த்து விட்டுள்ளார்.
ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் சுராஜ் செய்து வரும் சில்மிஷங்களை மோப்பம் பிடித்த அவரது சகோதரி அதை பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துள்ளார். இதனால் சுராஜ் செல்போன் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளனர். இதனால் கேம் விளையாட முடியாத விரக்தியில் இருந்த சுராஜ் தனது குடும்பத்தினரை கொலை செய்யும் கொடூர முடிவுக்கு வந்துள்ளான்.
கடந்த செவ்வாய் கிழமை நண்பர்களுடன் மெஹ்ராலி நகருக்கு சென்று ஆயுதங்களை வாங்கி வந்துள்ளான்.
அதன்பின் இரவில் பெற்றோருடன் சேர்ந்து புகைப்பட ஆல்பங்களை பார்த்துள்ளான். வழக்கம்போல் நடந்து கொண்டான். அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த அவன் தந்தையை கத்தியால் பலமுறை குத்தி உள்ளான்.
சத்தம் கேட்டு அதே அறையில் தூங்கி கொண்டிருந்த அவன் தாய் எழுந்து அலறினார். அவரை ஒரு முறை குத்தியுள்ளான். பின்னர் சகோதரி அறைக்கு சென்று அவரை கழுத்தில் குத்தியுள்ளான்.
இந்த சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அதன்பின்பு கைகளை கழுவி தடயங்களை அழித்து விட்டு வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து போட்டு விட்டு அருகில் வசிப்போரிடம் வீட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் வந்துள்ளனர் என கூறியுள்ளான்.
இதனை அடுத்து போலீசாரிடமும், கொள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளான். ஆனால் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என சுராஜ் கூறியுள்ளான். ஆனால் சுராஜை கொள்ளைக்காரன் விட்டு சென்றது ஏன் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் குழு சுராஜ் தடயங்களை அழித்த விவரத்தினை கண்டறிந்தனர். அதன்பின் போலீசார் சுராஜிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சுராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்" என்று கூறியுள்ளனர்.