BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கிறீர்களா.? முதலில் இதைப் படியுங்கள்.!!!
தோசை சுடுவது, குழம்பு வைப்பது, வறுவல் செய்வது என்று அனைத்து பயன்பாட்டிற்கும் நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலரிடம் உண்டு. சமைப்பதற்கு எளிதாக இருப்பதுடன், பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதும், அதிக எண்ணெய் தேவைப்படாதிருப்பதும், நான்ஸ்டிக் பாத்திரங்களின் மீது உள்ள மோகத்தை மக்களிடையே அதிகரித்துள்ளது.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் பெரும்பாலும் டெஃப்லான் கோட்டிங் செய்து தயாரிக்கப்படுகிறது. 2015 வரை PFOA என்ற இரசாயனம், டெஃப்லான் கோட்டிங் செய்ய பயன்படுத்தப்பட்டது. பின்பு அது உடலுக்கு நிறைய உபாதைகள் விளைவிப்பதை அறிந்து அவ்வகை பாத்திரங்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டது. PFOA என்ற இரசாயனம் மார்பக புற்றுநோய், மலட்டுத்தன்மை, குழந்தைகள் எடை குறைந்து பிறப்பது, தைராய்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரக தொந்தரவுகளை உருவாக்கக்கூடியது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இன்றளவும், விலை குறைந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் தரமற்றவையாக இருப்பதைக் காணலாம். இவற்றில் முதலீடு செய்வதற்கு முன் தரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள் PTFE எனப்படும் பாலிடெட்ரா ஃப்ளுரோ எத்திலின் என்ற செயற்கை இரசாயனம் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இவை சமைப்பதற்கு உகந்தது என்றாலும் அதிக வெப்பநிலையை அடையும் போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக அமையக்கூடும். எனவே இவற்றில் சமைக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து சமைப்பது நல்லது.
500°F அல்லது 260°C மேல் வைத்து சமைக்கும் பொழுது, அதிலிருந்து வெளியாகும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை காற்றில் கலக்கிறது. அது தலைவலி, சளி, இருமல் போன்ற தற்காலிக பிரச்சனைகளை உருவாக்கலாம்.

நான்ஸ்டிக் பாத்திரங்களின் நிறம் மங்கினாலோ அல்லது கோட்டிங் உரிந்தாலோ, அதனை உடனே மாற்றுவது அவசியம். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சமைக்கும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகிப்பதை அறவே தவிர்ப்பது நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு மாறாக எவர்சில்வர் பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்கள் மற்றும் அடி கனமான பாத்திரங்களும் சமைப்பதற்கு உகந்ததாகும்.