ஹூண்டாய் கார் கேட்டு அடம்பிடித்த மணமகன்; மாருதியை வாங்கிய பெண்வீட்டார்.. திருமணம் நிறுத்தம்.!



UP Muzaffarnagar's Rasulpur Dabhedi Groom Called Wedding Off 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர், ரசூல்பூர், தாபக்டி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், சிட்டோடா பகுதியை சேர்ந்த அமீர் ஆலம் என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்துள்ளனர்.

மணமகன் அரசு பணியில் உள்ள நிலையில், அவர் தனது மனைவி வீட்டாரிடம் ஹூண்டாயின் ஸிரேடா (Creta Car) காரை வரதட்சணையாக வாங்கித்தர கூறியுள்ளார். இதன் மதிப்பு ரூ.11 இலட்சத்தில் இருந்து ரூ.22 இலட்சம் வரை இருக்கிறது.

ஆனால், பெண் வீட்டார் ரூ.6 முதல் ரூ.8 இலட்சம் வரை விற்பனை செய்யப்படும் மாருதி வேகன் ஆர் (WagonR) காரை வாங்கி கொடுத்துள்ளனர். இன்று இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மணமகன் தனது காரை கேட்டுள்ளார். கார் திருமணம் நடந்த இடத்திற்கு வந்துள்ளது.

அங்கு தான் கேட்ட கார் இது இல்லை என வாக்குவாதம் செய்த மணமகன், எனக்கு ஸிரேடா கார் தான் வேண்டும் என கூறியுள்ளார். மணப்பெண் வீட்டார் தங்களால் இயன்றதை செய்துவிட்டோம் என மன்றாடியும் பலன் இல்லை. இதனால் திருமணத்தை நிறுத்திய மணமகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

மனமுடைந்து போன மணப்பெண், அதே கோலத்தில் உட்கார்ந்து கண்ணீருடன் கதறி அழுதார். மேலும், அவரின் தாயாரும் மகளின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.