இனி சுங்கச்சாவடி தேவையில்லை... கண்காணிப்பு கேமரா மூலம் புதிய திட்டம்.. மத்திய அரசு முடிவு..!

இனி சுங்கச்சாவடி தேவையில்லை... கண்காணிப்பு கேமரா மூலம் புதிய திட்டம்.. மத்திய அரசு முடிவு..!



there-is-no-need-for-toll-booth-anymore-new-project-wit

சுங்கச் சாவடியில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கடந்த 2019-ஆம் வருடம் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம், சில்லறைத் தட்டுப்பாடு, எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறையை சுலபமாக்குவதற்காக, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை நடைமுறைக்கு வந்தது. 90% சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஐந்து நுழைவாயில்களில், ஃபாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டன. ஒரு நுழைவாயிலில் மட்டுமே, பணமாக சுங்கவரியை செலுத்த முடியும். இருந்தும் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும். பின்னர், அந்த நம்பர் பிளேட் எண்ணை வைத்து வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் "நம்பர் பிளேட் ரீடர்" கேமராக்கள் பொருத்தபட உள்ளது. மேலும் சுங்கக் கட்டணம் செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. 

இந்த புதிய திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனங்கள் வழங்கும் நம்பர் பிளேட்டை வாங்கி வாகனங்களில் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து வாகனங்களுக்கும் இந்த நம்பர் பிளேட்களை தங்களது வாகனங்களில் பொருத்த வேண்டும். இதற்கான புதிய மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா சட்டமாகும் போது, சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்றும், தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டேக் கட்டண வசூல் முறை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஓரு வருடத்தில் முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.