கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!.. இந்தியக் கடற்படை அசத்தல் சாதனை..!

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!.. இந்தியக் கடற்படை அசத்தல் சாதனை..!


success-of-anti-ship-missile-test

இந்திய கடற்படை எதிரிநாட்டு கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்தியாவில் முப்படைகள் சார்பில் தற்போது அடிக்கடி புதிய ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக இந்திய ராணுவம் தனது ராணுவ வலிமையை அதிகரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக இந்தியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய கடற்படை சார்பில், ஒடிசா மாநிலம் பலாசோர் பகுதியில் நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணையானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. கப்பலை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை பலாசோரில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த சோதனையின்போது கடற்படை ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை கடலுக்கு நடுவே வந்து கொண்டிருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. சென்சார் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதால் இந்த ஏவுகணையிடம் இருந்து எதிரி நாட்டுக் கப்பல்கள் தப்பிக்க முடியாது என இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து கடற்படையையும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தையும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.