பாதுகாப்பாக தூங்கும் பிரக்யான் ரோவர்: இனி நிலவுக்கான இந்திய தூதராக நிலைத்திருக்கும்..!!



pragyan-rover-is-sleeping-safely-as-night-has-begun-on

நிலவில் இரவு பொழுது தொடங்கியுள்ளதால் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.

இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. முதலில் நிலவின் தரைப் பகுதியில் 8 செ.மீ ஆளவிற்கு துளையிட்ட ரோவர், நிலவின் தட்ப வெப்பநிலை குறித்த அதிர்ச்சிகரமான உண்மையை உலகிற்கு அறிவித்தது.

இதனை தொடர்ந்து, நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர், இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களும் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் இருப்பதையும் உறுதி செய்தது. மேலும் சூரிய ஓளியால் நிலவின் தரை பரப்பில் பிளாஸ்மா உருவாவதையும் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், நிலவின் பகல் பொழுது (14 நாட்கள்) நிறைவடந்ததால் ரோவர் தூக்க நிலைக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ரோவர் தனது பணிகளை நிறைவு செய்தது. அது தற்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு 'ஸ்லீப் மோட்' நிலைக்கு சென்றுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பேலோடுகளில் இருந்து தரவுகள் லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது.

ரோவரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல் செப்டம்பர் 22, 2023 அன்று சூரிய உதயத்தின் போது ஒளியைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ரிசீவர் ஆன் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பணியை தொடர்வதற்காக ரோவர் விழித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், நிலவுக்கான இந்தியாவின் தூதராக ரோவர் எப்போதும் அங்கு நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.