சிகிச்சையளிக்க தாமதம்.. ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்தவர் நரம்பு அறுந்து பலி.!

சிகிச்சையளிக்க தாமதம்.. ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்தவர் நரம்பு அறுந்து பலி.!



Pondicherry Thirubhuvanai Man Died due to Angry

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதம் ஆனதால், கண்ணாடி கதவை வாலிபர் கைகளால் உடைக்க நரம்பு துண்டிக்கப்பட்டு பலியான பரிதாபம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருபுவனை கலிதீர்த்தால்குப்பம் ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் அரசு (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நிலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய அரசுக்கு கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது நண்பர்கள் உடனடியாக அவரை திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Pondicherry

அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு, திடீரென மருத்துவமனையில் இருந்த கண்ணாடி கதவை கையால் உடைத்து இருக்கிறார். இதன்போது, கண்ணாடி உடைந்து அரசுவின் நரம்புகளை துண்டித்துள்ளது. 

அதனையும் கண்டு கொள்ளாமல் அந்த இடத்திலேயே அலப்பறை செய்த நிலையில், நரம்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து அதிகளவு இரத்தம் வெளியேறி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.