மகா சிவராத்திரி விழாவில் தகராறு.. போலீசார் கத்தியால் குத்தி கொலை!
மகா சிவராத்திரி விழாவில் தகராறு.. போலீசார் கத்தியால் குத்தி கொலை!
நாடு முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதன்படி நாடும் முழுவதும் உள்ள பல சிவன் கோவில்களிலும் மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவனை மனமுருகி வழிபட்டனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியில் உள்ள லுதுனா என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது அங்கே இரு தரப்பினரையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த நிரஞ்சன்சிங் என்ற போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடுப்பதற்கு முயன்றுள்ளார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் நிரஞ்சன் சிங்கின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த காவலர் நிரஞ்சன் சிங் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் நிரஞ்சன் சிங்கை கத்தியால் குத்தியது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.