மின்சாரம் செல்போன் இல்லாமல் சுயசார்பு வாழ்க்கை வாழும் மக்கள்; கோவிந்தனின் பெயரை சொல்லி வாழும் அதிசய கிராமம்..!

மின்சாரம் செல்போன் இல்லாமல் சுயசார்பு வாழ்க்கை வாழும் மக்கள்; கோவிந்தனின் பெயரை சொல்லி வாழும் அதிசய கிராமம்..!



people-living-self-reliant-lives-without-electricity-an

ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளத்தை அடுத்து அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம். நகரத்தின் பெரும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சின்னஞ்சிறு சாலை வழியாக இந்த கிராமத்திற்கு  செல்லலாம்.

"கர்மா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்திற்குள் நுழையும் முன்பு நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இங்கு மின்சாரம் கிடையாது அத்துடன் செல்போனும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் நவீன உலகின் மிச்சத்தை புறக்கணித்துவிட்டு இங்கு வந்து நிம்மதியாக வாழ்கின்றனர்.

ஊர் இந்த ஊரின் சிறப்பை கேள்விப்பட்டு எங்கே வந்து ஒரு முறை பார்க்க வேண்டும் அல்லது இங்கு வாழும் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்று யாராவது விரும்பினால், அவர்களுக்கு நிச்சயம் அனுமதி உண்டு. ஆனால் ஊரில் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வருபவர்களும், மின்சாரம் மற்றும் செல்போன் இல்லாமல் வாழ வேண்டும் என்பது இங்கு ஒரு எழுதப்படாத விதி.

இந்த கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை 300 ஆண்டுகளுக்கு முந்தைய வேத கிராமங்கள் எப்படி இருந்திருக்க கூடுமோ அப்படி தோற்றமளிக்கிறது. 

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பே 3.30 மணிக்கு முன்பே இவர்கள் அனைவரும் எழுந்து கொள்கின்றனர். ஸ்நானம் செய்த பிறகு கடவுளை வழிபட்டு விட்டு, பெரியவர்கள் வயல்களில் விவசாய வேலைகளை செய்ய செல்கின்றனர். 

சிறுவர்களுக்கு என்று பாடசாலைகள் உண்டு அந்த காலத்து வேத பாடசாலைகள் போன்று தோற்றமளிக்கும், அந்த பாடசாலைகளில் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கற்ற பாடங்களை, அதே விதமாக அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறதாம்.

பெரியவர்கள் மாலையில் வீடு திரும்பும் போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பாடல்களும் அவர்களுக்கு இதமளிக்கின்றன வீட்டில் உள்ள பசுக்களை வளர்க்கவும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மொத்தத்தில் இங்கு உள்ளவர்கள் கோபாலன் நாமம் சொல்லிக்கொண்டு, பாடலை பாடிக்கொண்டு பசுக்களை மேய்க்கின்றனர். பிடித்த கல்வியை கற்று, பிடித்த வேலையை செய்து, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இந்த கிராமத்து மக்களின் வாழ்வாதாரம் பசு வளர்த்தலும் விவசாயமும் மட்டுமே. வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தங்களது நிலங்களில் பயிரிட்டு கொள்கின்றனர் பசுக்கள் மூலமாக பால் கிடைக்கிறது. வீடுகளை சுட்டு களிமண் மற்றும் ஓடுகள், புற்களை வைத்து கட்டுகின்றனர். பனை ஓலைகளால் வேயப்பட்ட கூரைகளை  பயன்படுத்துகின்றனர்.

இங்கு வந்து வாழ விரும்புபவர்களும் இதே போன்ற வீடுகளை தான் கட்டிக் கொள்ள வேண்டும். வீடுகளை கட்டுவதற்கு கிராமத்தில் உள்ள அனைவரும் உதவுவார்கள். அதேபோல் இங்கு குடியிருப்பவர்கள் சுயநலமாக வாழ முடியாது. இந்த வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து வாழ விரும்பினால், அங்கு இருப்பவர்களைப் போலவே வீடு கட்டுதல், விவசாயம், பசு வளர்த்தல் போன்ற அனைத்து விஷயங்களிலும் உதவ வேண்டும், என்கின்றனர் இந்த கிராமத்து மக்கள்.

சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கிராமம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கிராமம் போல் தோற்றமளிக்கிறது. கோவிந்தா நாமத்தில் இருந்து கோவிந்த நாமத்தில் துயில செல்லும் அற்புத வாழ்க்கை முறை இந்த கிராமத்தின் வாழ்க்கை முறை.

நகரத்தின் வாழ்க்கை முறையை இவர்கள் தவறு என்று நினைக்கவில்லை. ஆனால் அமைதியான வாழ்க்கை முறையை விரும்புகின்றனர். இவர்களது வாழ்க்கை முறை ஒரு தவம் போல உள்ளது. மின்சாரம் இல்லாததால் இரவு 7.30 மணிக்கு எல்லாம் தூங்க சென்று விடுகின்றனர். மறுபடியும் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து விடுகின்றனர்.

இந்த கிராமத்திற்கு வந்து விரும்பி தங்களை இந்த கிராமத்துடன் இனைத்துக் கொண்டவர்கள் அனைவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில், உயர் பதவிகளில் லட்சம் லட்சமாக சம்பாதித்து கொண்டிருந்தவர்கள். அமைதியான இந்த வாழ்க்கை முறையை விரும்பி தேர்ந்தெடுத்து, இங்கு வந்து வாழ்கின்றனர்.

"கர்மா" கிராமத்திற்கு வெளிநாட்டினரும் வந்து தங்கிச் செல்கின்றனர் மேலும் சிலர் கிராமத்திலேயே வீடு கட்டிக் கொண்டும் வாழ்கின்றனர். ரஷ்யா அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் அங்கு வாழ்கின்றனர். சுயசார்பு வாழ்க்கை வாழும் இந்த கிராமம், அடுத்து வரும் தலைமுறைகளுக்கு முன்னோடியாக உள்ளது. மின்சாரம் எரிபொருட்கள் உணவு தானியங்கள் என எல்லாவற்றிலுமே ஒருவித பற்றாக்குறை நிலவும் இந்த நூற்றாண்டில், இனிவரும் சந்ததிகளுக்கு இது ஒரு மாதிரி கிராமம் என்று கூட சொல்லலாம்.

இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் மின்சாரம் செல்போன் என்று அனைத்து நவீன மயமாக்களின் அடையாளங்களும் உண்டு. ஆனால் இங்கு வாழும் மக்கள் அதனை தவிர்த்து விட்டு வாழ்ந்து பழகுகின்றனர். எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த வாழ்க்கை முறை, இனிமையானதாக உள்ளதாக அங்கு உள்ளவர்கள் கருதுகின்றனர்.