கைலாசாவிற்கு இலவச விசா, இலவச விமான சேவை..! அனைத்துமே இலவசம் அதிரடி ஆஃபரை வழங்கிய நித்யானந்தா.!
கைலாசாவிற்கு இலவச விசா, இலவச விமான சேவை..! அனைத்துமே இலவசம் அதிரடி ஆஃபரை வழங்கிய நித்யானந்தா.!
நித்தியானந்தா சமீபத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் பெயர் வைத்து சமூகவலைதளத்தில் தங்க நாணயத்தை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து சமீபத்தில் மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார்,
கைலாச நாட்டில் தனது டெம்பிள் சிட்டி ஹோட்டலின் கிளையை நிறுவ நித்யானந்தா அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதேபோல் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் கைலாசா தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தருமாறு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். அவர்களது கோரிக்கையை ஏற்ற நித்தியானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில், தற்போது, கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் மின்னஞ்சலில்(மெயில்) விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தினசரி 10 முதல் 25 நபர்களை மட்டும் சந்திக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்கள் என்றும், அதேபோல் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.