கொரோனாவை கட்டுபடுத்த வீட்டுக்கு வீடு குவாட்டர் பாட்டில்! பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 370க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளை தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கூறுகையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் இதனால் தினக் கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தொட்டாலே தீட்டு என நியாயப்படுத்தி கொரோனா பீதியை கிளப்புகின்றனர். அப்படியானால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட ரூபாய் நோட்டுகளை எரிப்பீர்களோ?
ஆரத்தழுவி வணங்குவதுதான் நமது பண்பாடு. இதற்கு எதிராக தீண்டாமையை பரப்பி வருகின்றனர். முட்டையை சாப்பிட்டால் கொரோனா வராது. இதோ நான் பச்சை முட்டையை உடைத்து குடித்து காட்டியிருக்கிறேன். எனக்கு கொரோனா வராது. வெளிநாட்டினர் மூலம்தான் கொரோனா பரவுகிறது என்றால் அவர்களை ஏன் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவில்லை? பேசாமல் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்கு வீடு குவார்ட்டர் மதுபானம் வழங்கலாம் என கூறியுள்ளார்.