தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மக்கள் பரிதவிப்பு.!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மக்கள் பரிதவிப்பு.!



Kerala Private Bus Strike Peoples Struggle

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், காலவரையற்ற போராட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசலின் விலை அதிகரிப்பால் தனியார் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12 ஆக உயர்த்தப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக மாநில போக்குவரத்து கழக அமைச்சர் ஆண்டனி ராஜிடமும் மனு வழங்கிய நிலையில், பேருந்து உரிமையாளர்களின் மனு மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனால் பல்வேறு உள்ளூர், வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில், காலை நேரங்களில் வேலைகளுக்கு செல்வோர் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, முக்கிய வழித்தடத்தில் அரசின் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

KERALA

மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவிக்கையில், "கேரள தனியார் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12 ஆக உயர்த்தப்பட வேண்டும். மாணவர்களுக்கான கட்டணம் ரூ.6 ஆக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். 

எங்களின் சார்பில் கோரிக்கை வைத்து 4 மாதங்கள் ஆகியும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. கொரோனாவால் ஏற்பட்ட இழப்பு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டதும் வருவாய் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அது எட்டாக்கனியாகியுள்ளது. அரசு எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.