நிறைமாத கர்ப்பிணி மனைவி..! இன்னும் 10 நாளில் குழந்தை..! கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த இணை விமானி அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத என்ற தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதால் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் தனது குழந்தை பிற்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விமானத்தின் இணை விமானி அகிலேஷ் குமார் தனது குழந்தை பிறப்பதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்த விமானி அகிலேஷ் குமார் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்துவந்துள்ளர். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் தற்போது இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவருக்கு இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறக்கவிருப்பதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பு அகிலேஷ் கடைசியாக வீட்டிற்கு வந்ததாகவும், அதன்பிறகு நாங்கள் அவரை பார்க்கவே இல்லை எனவும் சோகத்துடன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது குழந்தையின் முகத்தைக்கூட பார்க்காமல் அகிலேஷ் குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், மற்றவர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.