விவசாயிகளை விரட்டியடித்த போலீசார்.! கெத்து காட்டிய விவசாயிகள்.!

விவசாயிகளை விரட்டியடித்த போலீசார்.! கெத்து காட்டிய விவசாயிகள்.!


farmers protest in delhi

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி பேரணி நடத்தி, டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர். 

ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்கவில்லை. இதனால் எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

farmers

ஆனாலும், விவசாயிகள் பின்வாங்காமல் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கு நிலைமை மோசமான நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லிக்குள் காவல் துறை அனுமதித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கட்டமாக டிசம்பர் மூன்றாம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், கொரோனா தொற்று பரவல் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.