பாதிரியாரை ஆட்கொண்ட சுவாமி அய்யப்பன்: நடவடிக்கை எடுத்த கிறிஸ்தவ சபை..!!

பாதிரியாரை ஆட்கொண்ட சுவாமி அய்யப்பன்: நடவடிக்கை எடுத்த கிறிஸ்தவ சபை..!!



church-taking-action-against-the-priest-who-went-to-sab

சுவாமி அய்யப்பனால் ஈர்க்கப்பட்டு சபரிமலைக்கு சென்ற பாதிரியார் மீது திருச்சபை நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் கிறித்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இதற்கிடையே மனோஜீக்கு சபரிமலை அய்யப்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு மண்டலம் விரதம் இருந்த மனோஜ், திருவனந்தபுரம் திருமலையில் உள்ள கோவிலில் மாலை அணிந்து கடந்த மாதம் விரதத்தை தொடங்கினார். இதன் பின்னர், தினமும் காலை, மாலை இரு வேளையும் குளித்து அய்யப்பனுக்கு பூஜை செய்துள்ளார்.

நேற்று முந்தினம் ஒரு மண்டலம் விரதம் முடிந்த நிலையில்,  பாதிரியார் மனோஜ் திருவனந்தபுரம் திருமலையில் உள்ள மகாதேவர் கோவிலில் இருமுடி கட்டினார். அவருடன் மேலும் 5 பேர் இருமுடி கட்டி திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு அய்யப்பனை தரிசனம் செய்ய புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லும் வழியில் சிவகிரி, பந்தளம் மற்றும் எருமேலி உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் சபரிமலை மீது ஏறிய அவர்கள் அய்யப்பன் கோவிலை அடைந்து 18 படிகளில் ஏறி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதிரியார் மனோஜ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலை கோவில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

இந்த நிலையில், பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் திருச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆலயங்களில் திருப்பலி செய்ய தடை விதித்துள்ள திருச்சபை அவரது அடையாள அட்டையையும் திரும்ப பெற்றுள்ளது. இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.