அருணாச்சலப் பிரதேச எல்லைக்குச் சென்ற அமித்ஷா..!! எதிர்ப்பு தெரிவித்த சீனா...!!

அருணாச்சலப் பிரதேச எல்லைக்குச் சென்ற அமித்ஷா..!! எதிர்ப்பு தெரிவித்த சீனா...!!



Amit Shah visited Arunachal Pradesh border..!! China protested...

நேற்று அருணாசல பிரதேச எல்லைப்பகுதிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் எனக்கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சமீபத்தில் பெயர் மாற்றியுள்ளது. அங்குள்ள இடங்களுக்கு சீனா பெயர் சூட்டுவது மூன்றாவது முறையாகும்.

இந்தியா இந்த அத்துமீறலை  வன்மையாக கண்டித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் இந்த அப்பட்டமான விதிமீறலை நிராகரிப்பதாக  கூறியிருந்தது. மேலும் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் எப்போதும் அப்படியே இருக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்றார். அங்கு சீன எல்லையை ஒட்டி இருக்கும் கிபிதூ கிராமத்துக்கு சென்று,  'துடிப்பான கிராமங்கள் திட்டத்தை' தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அமித்ஷாவின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'சாங்னன் (அருணாசல பிரதேசத்தின் சீன பெயர்), சீனாவின் பிராந்தியம். இந்த பகுதியில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள், சீனாவின் இறையாண்மைைய மீறுவதாகும். இது எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்ததல்ல.இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.