செல்ஃபி மோகத்தால் விபரீதம்!.. 150 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த மணப்பெண்!.. தள்ளிப்போன திருமணம்..!

செல்ஃபி மோகத்தால் விபரீதம்!.. 150 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த மணப்பெண்!.. தள்ளிப்போன திருமணம்..!



A bride fell from a 150 feet high cliff due to selfie craze

கேரள மாநிலம் கொல்லம் அருகில் 150 அடி உயர பாறைக்கு மேல் நின்று செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி பாறைக்குளத்தில் விழுந்த இளம் பெண், வாலிபர் மீட்கப்பட்டனர். இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (25). துபாயில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அருகில் இருக்கும் பாரிப்பள்ளியை சேர்ந்த சாந்த்ரா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் நேற்று இரண்டு பேரும் அருகில் இருக்கும் கல் குவாரியான பாறைக்குளத்திற்கு, போட்டோ எடுக்க  சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் 150 அடி உயரத்தில் பாறை உள்ளது. அங்குள்ள குளத்தில் 50 அடியில் தண்ணீர் இருப்பதால், அது ஒரு அபாயகரமான பகுதி என்பதால், அந்த பகுதிக்கு அதிகமாக யாரும் அதிகமாக செல்வதில்லை. இரண்டு பேரும் பாறை மேல் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சாந்த்ரா 150 அடி உயரத்தில் இருந்து பாறைக் குளத்திற்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வினு கிருஷ்ணனும் அவரைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தார். சாந்த்ராவின் உடை வினு கிருஷ்ணன் கையில் கிடைத்ததால், அவரை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு கொண்டு சென்றார். 

இரண்டு பேரின் கூச்சலை கேட்டதும் அந்த பகுதியில் உள்ளவர்கள் விரைந்து வந்து, பாறையின் மேலிருந்து அவர்களுக்கு ஒரு கயிறை போட்டனர். இரண்டு பேரும் கயிறை பிடித்தபடி பாறையின் அருகே ஒதுங்கி நின்றனர். இதுகுறித்து காவல் துறை மற்றும் தீயணைப்புப் படைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். 

கீழே விழுந்ததில் காயமடைந்த இருவரையும் கொல்லத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தை  தொடர்ந்து இன்று நடைபெற இருந்த அவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.