விமான பயணத்திற்கு வந்த 81 வயது முதியவர்! அவரை சோதனை செய்தபோது அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணம் மேற்கொள்ள 81 வயது முதியவர் ஒருவர் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் வழக்கம்போல் விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சோதனையின் போது அவரை நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க கோரிய அதிகாரிகளிடம் அவர் வயது மூப்பை காரணம் காட்டி மறுத்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்த நிலையில், முதியவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரி ஒருவர் அவரது பாஸ்போட்டை பரிசோதித்துள்ளார். அதில் அவர் பெயர் அம்ரிக் சிங் எனவும் 81 வயது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அவரது முகத்தில் 81 வயது முதியவருக்கான தோற்றம் இல்லாமல், அவரது தாடியும் தலைமுடியும் மட்டுமே நரை பாதித்திருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அம்ரிக் தமது தாடி மற்றும் தலைமுடிக்கு வண்ணம் பூசியுள்ளதும், கண்களுக்கு முதியவர்கள் அணிந்துகொள்வது போன்று போலி கண்ணாடி அணிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், அம்ரிக்கின் உண்மையான பெயர் ஜயேஷ் பட்டேல் எனவும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 31 வயதான இவர் போலியான பாஸ்போட்டை ஒன்றை பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட பட்டேல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.