மனதை நொறுக்கிய அந்த ஒத்த வார்த்தை.. கணவன் சொன்ன அந்த ஒத்த வார்த்தைதான் சித்ரா சாவுக்கு காரணமா?



VJ Chitra suicide reasons

செத்துப்போ என கணவர் சொன்ன வார்த்தைதான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தமே அவரது தற்கொலைக்கு காரணம் என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் பல புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

VJ Chithra

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை செய்துவரும்நிலையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பல தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது. மேலும் சித்ராவுக்கு சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் இருந்த செல்போனை போலீசார் கைப்பற்றி செல்போனில் பதிவான தகவல்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

செல்போனில் இருந்து பல்வேறு தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் சைபர் கிரைம் பிரிவு போலீசாரின் உதவியுடன் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சித்ரா - ஹேம்நாத் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், திருமணம் முடிந்த சில நாட்களிலையே சித்ரா மீது ஹேம்நாத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. நீ எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், என்ன ஆட்டம் எல்லாம் போட்டாய் என்பது எல்லாம் எனக்குத் தெரியும் என ஹேம்நாத் சித்ராவிடம் பேசியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் சில நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று பிரச்சனையும் செய்துள்ளார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த தொடரின் சகநடிகருடன் சில நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதனை சுட்டிக்காட்டி சித்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் ஹேம்நாத்.

VJ Chithra

மேலும் நடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சித்ராவிடம் ஹேம்நாத் கூறியதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் பெரும் மனஉளைச்சலில் இருந்த சித்ரா, தற்கொலை செய்துகொண்ட அன்று இரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹோட்டல் அறைக்கு வந்தபிறகு, ஹேம்நாத் சித்ராவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ''நீ உயிரோடு இருப்பதை விட, செத்துப்போவதே மேல், செத்து போ" என கூறிவிட்டு ஹேம்நாத் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. இந்த வார்த்தையை கொஞ்சமும் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ளும் கொடூர முடிவை எடுத்ததாகத் தெரிய வந்துள்ளது.