"பணமோசடி விவகாரத்தில் அமலா சாஜி அப்பாவியே" - ரவி ஐபிஎஸ் தகவல்.! 

"பணமோசடி விவகாரத்தில் அமலா சாஜி அப்பாவியே" - ரவி ஐபிஎஸ் தகவல்.! 



Ravi IPS about Amala Shaji Also a Victim in Online Cyber Crime Scam Case 

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்பெற்ற பெண்மணியாக இருக்கும் அமலா ஷாஜி, சமீபத்தில் ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தை பதிவிட்டார். இந்த விளம்பரத்தை கண்ட பலரும் தங்களின் பணத்தை முதலீடு செய்த நிலையில், அவரின் பின்தொடர்பாளர் ஒருவர் ரூ.45 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். 

இதனால் அமலா ஷாஜி விளம்பரம் செய்த மோசடி செயலி குறித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பலனில்லை. இதனால் வழக்கறிஞர் உதவியுடன் அதனை சட்டப்போராட்டத்திற்கு உட்படுத்தியுள்ளதால், மோசடி செயலி விவகாரத்தில், அதனை பணத்திற்காக விளம்பரப்படுத்திய அமலா ஷாஜி கைது செய்யப்படலாம் என்ற விவாதங்கள் இணையத்தில் உருவாகின.

இந்நிலையில், முன்னாள் தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஐபிஎஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "அமலா ஷாஜி விவகாரத்தில், அவரும் ஒரு பாதிக்கப்பட்டவர் தான். இந்த விவகாரத்தில் மோசடி செய்தவர் தான் முக்கிய குற்றவாளி. அவரை அதிகாரிகள் விசாரித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்பெற்றவர்களாக இருக்கும் நபர்கள், தங்களுக்கு வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். கிரிப்டோ உட்பட பல்வேறு பணமோசடி குறித்த செயலிகள் இவ்வாறாகவே பிரபலமாக்கப்படுகிறது. பின் பணம் பலரால் இழக்கப்படுகிறது. 

இவை அனைத்துமே மோசடிதான். ஆகையால் மக்கள் அதனை தவிர்க்க வேண்டும். இவ்வாறான விளம்பரங்களை நம்ப வேண்டாம். பிரபலமான நபர்களும் விளம்பரங்களை பணத்திற்காக பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்" என கூறினார்.