'அன்னபூரணி' திரைப்பட விவகாரம்.. வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா.!

'அன்னபூரணி' திரைப்பட விவகாரம்.. வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா.!



nayanthara-apology-for-annaboorani-movie

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் கடந்த டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கே எஸ் ரவிக்குமார், பூர்ணிமா ரவி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட திரப்பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

Annaboorani

இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடும் எதிர்ப்புக்களும் கிளம்பியது. இதனையடுத்து அன்னபூரணி படத்தை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அன்னபூரணி திரைப்படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

Annaboorani

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTT-யில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."
அன்புடன், நயன்தாரா என தெரிவித்துள்ளார்.