சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்ட சினிமா படப்பிடிப்புகள்; கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!
சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்ட சினிமா படப்பிடிப்புகள்; கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!
சென்னையில் கடந்த சில நாட்களாக விஷால் நடிக்கும் ‘அயோக்கியா’, அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’, லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா-3’, விமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, விக்ரம் பிரபு நடிக்கும் ‘அசரகுரு’ உள்பட 20 படங்களின் படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் நஷ்டம் அடைந்துள்ள தயாரிப்பாளர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
இந்த திடீர் போராட்டத்திற்கு காரணம் சென்னை வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் நடைபெற்ற ஒரு விளம்பர படப்பிடிப்பின் நடந்த சம்பவம் தான். படப்பிடிப்பு முடிந்ததும் பெப்சியில் உள்ள அவுட்டோர் யூனியனை சேர்ந்தவர்கள் கேமராவை வாடகை காரில் ஏற்றி விட்டனர். இதற்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் படப்பிடிப்பு தளவாடங்களை ஏற்றிச்செல்லும் பெட்போர்டு யூனியனை சேர்ந்த டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படப்பிடிப்பு சாதனங்களை எங்கள் யூனியன் வாகனங்களில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது நடைமுறை. அதை மீறி வாடகை காரில் ஏற்றியது தவறு என்று கண்டித்தனர். அத்துடன் சென்னையில் நேற்று நடந்த சினிமா படப்பிடிப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைப் பற்றி ஆலோசிக்க நேற்று இரவு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.