தமிழக அரசு தாய்ப்பறவை போல் செயல்படுகிறது.! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா.!

தமிழக அரசு தாய்ப்பறவை போல் செயல்படுகிறது.! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா.!


barathiraja-thanks-to-mk-stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு 21-ஆம் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்த நிலையில், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீடிக்க உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் பேருந்து சேவை, கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதில், கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். அதில், மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

barathiraja

நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள் கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை குறைத்தது,  தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே ரசிக்கிறோம். சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும்  நன்றிகள்.

முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம். பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம். என பத்துமாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது. 

படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது. மேலும் இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தாங்கள் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தயாரிப்பாளர்களும் வழிகாட்டல் நடைமுறையைப் பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றை முறியடிக்கும் விதமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கிறோம் என்று பாரதிராஜா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.