வெள்ளத்துக்கு நடுவே குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிய வாலிபர்! திக் திக் காட்சி..!!!
நேபாள வெள்ளத்தில் தொங்கு பாலத்தை இளைஞர் ஓடும் வைரல் வீடியோ உண்மையா, ஏஐ உருவாக்கியதா என்ற கேள்வி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொங்கு பாலம் ஒன்றை வெள்ளநீர் மூழ்கடிக்கும் அளவுக்கு உயர்ந்தபோது இளைஞர் ஒருவர் அதைக் கடக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினருடன் இணைய அவர் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாலத்தில் ஓடிச் செல்வது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், இந்தக் காட்சிகள் உண்மையா அல்லது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வெள்ளத்துக்கு நடுவே பாலத்தில் ஓடிய இளைஞர்
வைரலாகும் வீடியோவில், அடைமழையால் ஆற்றில் வெள்ளநீர் சீறிப்பாய்கிறது. தண்ணீர் தொங்கு பாலத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த நிலையில், மறுபுறம் சிக்கியிருந்த தனது குடும்பத்தினரிடம் செல்ல இளைஞர் ஒருவர் பாலத்தின் மீது வேகமாக ஓடுகிறார். சில நொடிகளில் பாலத்தைக் கடந்து அவர் மறுகரையை அடையும் காட்சியும் பதிவாகியுள்ளது.
துணிச்சலா? ஆபத்தான முடிவா?
வீடியோவை பார்த்தவர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன. குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டிய சூழலில் அவர் எடுத்த துணிச்சலான முடிவு என சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், வெள்ளநீர் வேகமாகப் பாயும் நிலையில் பாலத்தில் ஓடுவது மிகப்பெரிய ஆபத்து என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையான வீடியோவா... ஏஐ உருவாக்கியதா?
இதற்கிடையே, வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொங்கு பாலம் முடியும் பகுதி வீட்டின் இரண்டாவது தளத்துடன் இணைந்திருப்பது போல் காட்சியளிப்பதால், இது உண்மையான காட்சியா அல்லது AI வீடியோவா என இணைய பயனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வீடியோ எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான தெளிவான தகவல் இல்லாத நிலையில், அதன் நம்பகத்தன்மை தனியாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.