வேதனையின் வெளிப்பாடு... ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருமானம்.! ஊழியர்களுக்கு வெறும் ரூ.500 கோடி தானா? டாஸ்மாக் கல்லாவால் கடும் அதிருப்தியில் ஊழியர்கள்!!!
குறைந்த ஊதியம், பணிச்சுமை, கடை மூடல், மதுபான தரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் டாஸ்மாக் ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். நிர்வாக சீர்திருத்தம் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
குறைந்த ஊதியம், அதிக பணிச்சுமை மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்தத் துறையில், ஊழியர்களின் நலன் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறைந்த சம்பளமே முக்கிய குற்றச்சாட்டு
தகவலின்படி, டாஸ்மாக் சூப்பர்வைசர்களுக்கு மாதம் சுமார் ரூ.14,500 மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ.11,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வில் இந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ 48,000 கோடி வருவாய் ஈட்டும் இந்தத் துறையில், ஊழியர்களின் மொத்த சம்பளமாக வெறும் ரூ 500 கோடி மட்டுமே தான் என வேதனை தெரிவிக்கின்றனர். பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது, பார் கமிஷன் மற்றும் உடைந்த பாட்டில்களுக்கான இழப்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இந்த ஊதியப் பிரச்சினையும் முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடை மூடல் குறித்து அதிருப்தி
தற்போதைய தவெக ஆட்சியில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து ஊழியர் சங்கங்களுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு பகுதிகளில் அமைதியாக புதிய கடைகள் செயல்படுவதாகவும், இதனால் பல ஊழியர்களின் பணிநிலை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிர்வாக தவறுகளுக்கான பொறுப்பும் பெரும்பாலும் கீழ்மட்ட ஊழியர்கள் மீதே சுமத்தப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுபான தரம் குறித்த விமர்சனம்
இதனுடன், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்தும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. மதுபான தரம் மட்டுமின்றி, நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழல் தடுப்பு மற்றும் ஊழியர் நலன் ஆகிய துறைகளிலும் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.