சிலையை கரைக்கச் சென்ற இடத்தில் அதிர்ச்சி.. விநாயகருடன் ஆற்றுக்குள் சென்ற 1.5 பவுன் நகை.. தீவிர தேடுதல்!
சிலையை கரைக்கச் சென்ற இடத்தில் அதிர்ச்சி.. விநாயகருடன் ஆற்றுக்குள் சென்ற 1.5 பவுன் நகை.. தீவிர தேடுதல்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை நீர்நிலையில் கரைக்கச் சென்றபோது, சிலையுடன் சுமார் ஒன்றரை பவுன் தங்க நகையையும் சேர்த்து ஆற்றில் வீசிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான நேற்று கடற்கரை, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
அந்த வகையில், கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள உப்பனாறு பாலம் அருகே பொதுமக்கள் பலர் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் தனது வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஆற்றில் வீசியுள்ளார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி நாளில் சோகம்... சிலையை கரைக்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!
பொதுவாக விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகளை, சிலையை நீரில் கரைப்பதற்கு முன்பு கழற்றி வைத்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த முதியவர் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த சுமார் ஒன்றரை பவுன் தங்க நகையை கழற்ற மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிலை ஆற்றில் விழுந்த சில நொடிகளிலேயே நகை அணிவித்திருந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், அவருடன் வந்த இருவருடன் சேர்ந்து உடனடியாக ஆற்றில் இறங்கி நகையைத் தேடத் தொடங்கினார்.
இதுகுறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, விநாயகர் சிலை வீசப்பட்ட பகுதியில் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலையுடன் தங்க நகையும் ஆற்றில் சென்ற சம்பவத்தால் தேவனாம்பட்டினம் உப்பனாறு பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்.. போராட்டம் எதிரொலி.. போலீசார் குவிப்பு!