யாரு மேல தப்பு சொல்றது... அரசு பேருந்தை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்! தாய், மகள் பரிதாபமாக பலி....!!!
செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது எதிரே வந்த பள்ளிப் பேருந்து மோதி தாய், மகள் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியது. இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகளும் உயிரிழந்தார்.
அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது மோதல்
கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவி (45), அவரது மகள் சுவாதி (23) ஆகியோர் நேற்று ஒரே ஸ்கூட்டரில் ஊரப்பாக்கம் நோக்கி சென்றனர். வாகனத்தை சுவாதி ஓட்டிச் சென்றுள்ளார். காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல அவர் முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து, சுவாதி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. மோதலின் வேகத்தில் தேவி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மகளும் உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த சுவாதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்தனர்.
தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து போலீசார், விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதே மோதலுக்கு காரணமா அல்லது எதிரே வந்த பள்ளிப் பேருந்தின் இயக்கத்தில் வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாய், மகள் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.