சுமங்கலி வரத்தை தரும் காரடையான் நோன்பு 2026 எப்போது? முழு விபரம் இதோ.!
தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், குடும்ப ஒற்றுமை வளம் பெறவும் பெண்கள் காரடையான் விரதத்தை கடைபிடிக்கலாம்.
காரடையான் நோன்பு 2026 எப்போது? இந்த நாளின் முக்கியத்துவம் என்ன? பெண்கள் எப்படி நோன்பு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
விரதத்தின் முக்கியத்துவம்:
தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகக் கருதப்படுவது காரடையான் நோன்பாகும். திருமணமான பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நோன்பு மாங்கல்ய நோன்பு, சுமங்கலி நோன்பு அல்லது சுமங்கலி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் நாளில், சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி பெறும் மீன சங்கராந்தி தினத்தில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் திருமணமான பெண்கள் மஞ்சள் சரடு கட்டி வழிபடுவதும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி மஞ்சள் கயிறு கட்டி விரதம் இருப்பதும் வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!
சுமங்கலி விரதம்:
2026ஆம் ஆண்டில் காரடையான் நோன்பு மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு மார்ச் 14ஆம் தேதி காலை 6.48 மணிக்கு தொடங்கி, மார்ச் 15ஆம் தேதி அதிகாலை 1.08 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் சுப முகூர்த்த நேரத்தில் பெண்கள் தாலி சரடை மாற்றிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது. சிலர் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை முழு விரதம் இருந்து வழிபடுவதையும் கடைப்பிடித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
காரடையான் நோன்பு சாவித்திரி கடைபிடித்த விரதத்தை நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எமனிடமிருந்து தனது கணவர் சத்தியவானின் உயிரை மீட்டுக் கொண்ட சாவித்திரியின் பக்தியை நினைவுகூர்ந்து இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் சாவித்திரி கடைபிடித்த முறையில் இந்த விரதத்தை கடைபிடித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் காமாட்சி அம்மன் அல்லது பார்வதி தேவியை வழிபடுவது வழக்கம். மேலும் அரிசி மாவு, வெல்லம் மற்றும் கருப்பு காராமணி கொண்டு இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான ‘காரடை’ தயாரித்து நைவேத்தியமாக படைத்து வழிபடுகின்றனர்.
விரதம் இருப்பது எப்படி?
காரடையான் நோன்பு அன்று பெண்கள் அதிகாலையில் எழுந்து மஞ்சள் பூசி குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசமாக இருந்து வழிபடுவது சிறப்பு. முழு விரதம் இருக்க முடியாதவர்கள் புளிப்பு மற்றும் உப்பு சேர்க்காத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் காமாட்சி அம்மன் படத்திற்கு முன் மஞ்சள் சரடு வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபட வேண்டும். பின்னர் மஞ்சள் சரடை கணவரின் கைகளால் பெற்று கழுத்தில் கட்டிக் கொள்வது வழக்கம். கணவர் அருகில் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களின் கைகளில் இருந்து சரடை பெற்று கட்டிக் கொண்டு அவர்களிடம் ஆசீர்வாதம் பெறலாம். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் வழங்கி, மஞ்சள், குங்குமம், பூ மற்றும் தாலி சரடு போன்றவற்றை தானமாக வழங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.