இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்றும், யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவை கோரி தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களை அணுகியுள்ளனவா என்ற கேள்விக்கும் பதிலளித்தார். எனினும், யாருக்கு ஆதரவு என்பது குறித்து கட்சி விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய அன்புமணி, லண்டனில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ஏற்கனவே சென்னையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். சென்னையில் செயல்பட்டு வரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்காக லண்டன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் வந்த முதல் ஆப்பு! சந்திப்பை மறுத்த அன்புமணி? பின்னணியில் இருக்கும் தவெக... தலைகீழாக மாறிய இடைத்தேர்தல் ஆட்டம்..!!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தினார். பட்டினப்பாக்கம் குறுகிய பகுதி என்பதால், சென்னைக்கு வெளியே சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பரந்தூரில் விமான நிலையத்திற்கு மாற்றாக தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் தொடர்பாகவும் அன்புமணி கருத்து தெரிவித்தார். பரந்தூரில் எந்தவிதமான தொழிற்பேட்டையும் அமைக்கக் கூடாது என்றும், அவ்வாறு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தாமே போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால்தான் விஜயை முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார். முந்தைய ஆட்சியை தொடர்ந்து குறை கூறுவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒருவரை ஒருவர் குறை கூறுவதை விடுத்து, மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அன்புமணி, வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்தல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகளின் துயரங்களைப் போக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING : சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. 5 முனைப் போட்டி.. சிபிஐ, சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!