ஆணவ அரசியலால் ஆட்சிக்கே பாதிப்பு...! த.வெ.க. அரசை கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், ஆணவ அரசியல் அழிவை விரைவுபடுத்தும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும், அரசின் ஆணவப் போக்கு தொடர்ந்தால் அது ஆட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி விவகாரப் பேச்சுக்கு பிறகு கைது
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், அதற்கு அரசு தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் நோக்கத்துடன் நடவடிக்கை?
இதையடுத்து, பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கில் போலீசார் உதயநிதியை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அவர் சட்டப்பேரவையில் பங்கேற்க முடியாத வகையில் திட்டமிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை மட்டுமே நோக்கமாக இருந்தால் சென்னையிலேயே நடத்த முடிந்திருக்கும்போது, தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்
நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, கைது செய்யும் நோக்கம் இல்லை என்றும் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படும் என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், உதயநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த பதிலடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆட்சியை விமர்சிப்பவர்களை கைது செய்வது வழக்கமாகிவிட்டதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், உதயநிதி பேசாத கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக தொண்டர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், 'ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்' என்று தனது அறிக்கையின் நிறைவில் தெரிவித்துள்ளார்.