மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயல்.. தவெகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் காட்டம்!
மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயல்.. தவெகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் காட்டம்!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும், வழிபாட்டுக்கும் உரிய விநாயகர் உருவத்தை தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் மாற்றியமைப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புனிதமான விநாயகர் சதுர்த்தி விழாவை அரசியல் சுயலாபத்திற்கான தளமாக மாற்றக்கூடாது என்றும், இறை வழிபாட்டை தேர்தல் பிரசாரமாக மாற்றும் வகையிலான செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற செயல்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் மத உணர்வுகளையும், வழிபாட்டு மரபுகளையும் பாதிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இறை உருவங்களை சுய விளம்பரத்திற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு எதிரொலி… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி?