Chain Snatching Death: செயின் பறிப்பில் அப்பாவி பெண் துள்ளத்துடிக்க பலி.. நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்.!
Bangalore Chain Snatching Death: பெங்களூருவை உலுக்கிய செயின் பறிப்பு சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
வீட்டு வாசலில் நடந்த திடீர் செயின் பறிப்பு சம்பவத்தால், அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து 45 வயது பெண் மரணம் அடைந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு, நெலமங்களா பகுதியில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் அப்பாவிப் பெண்ணின் உயிரைப் பறித்துச் சென்றது. ஹுஸ்கூர் பகுதியில் வசித்து வந்த 45 வயதான ஜோதி என்பவர், உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியே வந்த வேளையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டு வாசலில் டூவிலரில் காத்திருந்த மர்ம நபர் ஒருவர், ஜோதியை கண்டதும் வாகனத்தை ஸ்டார்ட் செய்து திடீரென யூ-டர்ன் எடுத்து, அவரது கழுத்திலிருந்த 9 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அசுர வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: "சொந்த மகளை கர்ப்பமாக்கி வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற தந்தை... " சுற்றி வளைத்த பொதுமக்கள்.!! போலீஸ் விசாரணை.!!
அதிர்ச்சியில் சோகம்:
இந்த எதிர்பாராத தாக்குதல் ஜோதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடனை பார்த்ததும் கத்திக்கொண்டே அவரை துரத்த முயன்ற ஜோதி, சில அடிகள் ஓடிய நிலையில் திடீரென சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஜோதியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன், அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெலமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குற்றவாளிக்கு வலைவீச்சு:
மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், ஜோதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் தொடர்பாக மடநாயக்கனஹள்ளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஜோதியின் உடல் உடற்கூராய்விற்காக பெங்களூருவிலுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலையில் ஊஞ்சல் விளையாடிய 12 வயது சிறுவன்! நொடிப்பொழுத்தில் நடந்த விபரீதம்! பெரும் சோகம்!