காதலியை ரகசியமாக சந்திக்க இரவில் சென்ற இளைஞர்… மறுநாள் மணமகனான அதிர்ச்சி சம்பவம்!
காதலியை ரகசியமாக சந்திக்க இரவில் சென்ற இளைஞர்… மறுநாள் மணமகனான அதிர்ச்சி சம்பவம்!
பீஹார் மாநிலம் முஜஃபர்பூரில், காதலியை ரகசியமாக சந்திக்க இரவு நேரத்தில் சென்ற இளைஞருக்கு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியை சந்திக்கச் சென்ற அவரை கிராமத்தினர் பிடித்த நிலையில், மறுநாள் அதே இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலம் முஜஃபர்பூர் மாவட்டம் போச்சஹான் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், அஹியாபூர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், சுமார் ஓராண்டாக இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு காதலியை சந்திப்பதற்காக இளைஞர் அவரது கிராமத்துக்குச் சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் காதலியை சந்தித்துவிட்டு திரும்பிவிடலாம் என அவர் நினைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது வருகை கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கு திரண்ட கிராமத்தினர், இளைஞரையும் இளம்பெண்ணையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?
இருவரும் காதலித்து வந்தது தெரியவந்ததும், காதல் இருந்தால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாள் இளம்பெண்ணின் வீட்டிலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
இதனையடுத்து கிராமத்தினர் முன்னிலையில் இளைஞர் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே, இருவருக்கும் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அஹியாபூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இருவரும் வயது வந்தவர்கள் என்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் இருவரும் தங்களது விருப்பத்தின்படியே ஒன்றாக வாழ விரும்புவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். காதலியை ரகசியமாக சந்திக்கச் சென்ற இளைஞர், கிராமத்தினரின் தலையீட்டால் மறுநாளே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொடூர கொலை.. காதலன் வெறிச்செயல்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!