9 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்? மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு!
9 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்? மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தின் பண்டா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு சிலர் மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்தடுத்து அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பண்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குப்பை மேடாக கிடந்த நதி... தனி ஒருவனாக சுத்தம் செய்த 20 வயது இளைஞர்!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு, கடந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மதுபானம் அருந்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கலப்பட அல்லது விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான சரியான காரணம் மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணையின் முடிவிலேயே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபானம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாகர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.