இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த 10 மாத கைக்குழந்தை.. பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.!
10 Month Old Baby Organ Donation Kerala: மூளைச் சாவுக்குப் பிறகு உடல் உறுப்பு தானம் செய்த குழந்தையால் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த குழந்தையின் பெற்றோர் எடுத்த மனிதநேய முடிவால், குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள், இதயக் குழாய்கள், கண்கள் தானம் பெறப்பட்டன.
10 மாத குழந்தை:
கேரள மாநிலத்தில் 10 மாத பெண் குழந்தை ஒருவர், சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பின்னர் உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு புதிய வாழ்க்கை அளித்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தையும், மனிதநேயத்தின் உச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தை ஏலின் ஷெரின் ஆப்ரகாம்.
இதையும் படிங்க: "போதை பார்ட்டி, உல்லாசத்திற்கு தடை.." 3 வயது குழந்தை படுகொலை.!! லிவ்விங் டுகெதர் ஜோடி வெறி செயல்.!!
விபத்து சம்பவம்:
கடந்த பிப்ரவரி 5, 2026 அன்று, குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 10 மாத குழந்தை ஏலின் ஷெரின் ஆப்ரகாம் பலத்த காயமடைந்தார். அவருடன் பயணம் செய்த தாய், தாத்தா, பாட்டி ஆகியோரும் படுகாயமடைந்தனர். விபத்துக்குப் பின்னர் குழந்தை அவசரமாக கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூளைச்சாவு & உடல் உறுப்பு தானம்:
பலநாள் போராட்டத்திற்குப் பின்னர், பிப்ரவரி 13, 2026 அன்று குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து, ஆழ்ந்த துயரத்திலும் மனிதநேய எண்ணத்திலும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். மருத்துவ குழுவின் மேற்பார்வையில் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதயக் குழாய்கள் மற்றும் இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
இந்த உறுப்புகள் 6 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் புதிய வாழ்க்கை அளிக்கின்றன என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. பெற்றோரின் செயல் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஆப்பிள்.. பரிதவித்த பெற்றோர்.. இறுதியில் இன்ப அதிர்ச்சி.!